1. அதிபத்த நாயனார்
அதிபத்த நாயனார் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். நாகப்பட்டினம் மீனவ குலத்தில் பிறந்தார் மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டிருந்தவர். தன்னுடைய சிவபக்தியின் காரணமாக, தான் பிடிக்கும் மீன்களில் சிறந்த ஒன்றை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். சில நாட்களில் ஒற்றை மீனே பிடிபட்டாலும் அதனை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்து விட்டு, வெறுங்கையுடன் திரும்புவார். இதனால் வறுமையால் வாடினார். ஒரு சமயம் சிவபெருமான் அதிபத்தரை சோதிக்க எண்ணி ஒரு மீனும் பிடிபடாத நாளில், ரத்தினங்கள் பதிந்த தங்க மீனை வலையில் சிக்குமாறு செய்தார். ஆனால் தீவிரமான பக்தரான அதிபத்தர் அதனையும் சிவபெருமானுக்கே அர்ப்பணம் செய்தார். இவ்வாறு தான் வறுமையிலும், பசியிலும் வாடிய பொழுதும் இறைவனுக்கு சமர்ப்பிக்கும் வழமை தவறாத பக்தியை கொண்டவராக அதிபத்தர் விளங்கியமையால் அவரை நாயன்மார்களில் ஒருவராக போற்றுகின்றார்கள்.
நாகப்பட்டணம் சிவன் கோவில் அதிபத்தநாயனார் கோவில் என வழங்கப்படுகிறது.
இவரை “விரிதிரை சூழ் கடற்நாகை அதிபத்தர்க்கடியேன்” என்று திருத்தொண்டத் தொகையில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் குறிப்பிடுகிறார்.
இது காவிரி தென்கரையில் அமைந்துள்ளது. 82-வது தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலமாகும். 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
இறைவன்: காயாரோகணேஸ்வரர் (சுயம்பு மூர்த்தியாக, அதீத அழகுடன் காட்சி தருகிறார்)
இறைவி : நீலாயதாட்சியம்மை
தலமரம் : மா மரம்
தீர்த்தம் : புண்டரிக தீர்த்தம்
குலம் : நுளையர்
அவதாரத் தலம் : நம்பியார் நகர்
முக்தி தலம் : நம்பியார் நகர்
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : ஆவணி – ஆயில்யம்
வரலாறு: சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரால் பாடப்பெற்றது. அகத்தியர், ஆதிசேஷன் வழிபட்ட தலம்.
சப்தவிடங்கத் தலம்: இது சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றான “சுந்தர விடங்கர்” தலம்
முகவரி : அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில், நம்பியார் நகர் – 611001, நாகை, நாகை மாவட்டம்.
