வள்ளிமலை
வள்ளிமலைக் கோயில் வள்ளி வாழ்ந்த இடமாக கூறப்படுகிறது. வேலூரில் இருந்து வள்ளிமலை சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
புராண வரலாறு :
சமண சமயத்தில் 23-வது தீர்த்தங்கரராகத் திகழ்ந்தவர் பார்சுவநாதர். இவரது பாதுகாவலர்களாகவும், அவர்களின் சாசனா தெய்வமாகவும் விளங்கியவர்கள் பத்மாவதி இயக்கியம்மனும், இயக்கன் தர்னேந்திரனும் ஆவர். இச்சிற்பம், வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வள்ளிமலையில் சமண பெண் தெய்வமாக பத்மாவதி இயக்கியம்மன் காணப்படுகிறாள். வள்ளிமலை ஒரு சமணத் தலமாக விளங்கிய ஒன்று. இத்தலத்தில் வளர்ந்த வள்ளி, முருகனை கணவனாக அடைய விரும்பி, திருமால் பாதத்தை வைத்து வழிபட்டாள். கன்னிப்பருவத்தில் அவள் தினைப்புனம் காக்கும் பணி செய்தாள். அங்கு வந்த முருகன், வள்ளியைத் திருமணம் செய்ய விரும்பினார். இதையறிந்த வள்ளியின் வளர்ப்பு தந்தை நம்பிராஜன், திருத்தணியில் முருகனுக்கு முறைப்படி வள்ளியை திருமணம் செய்து கொடுத்தார். நம்பிராஜனின் வேண்டுதலுக்கு இணங்க இங்குள்ள குன்றில் முருகன் எழுந்தருளினார். வள்ளிமலைக் கோயிலிலின் கருவறையில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். வள்ளி குறவர் வேடர் குலத்தில் வளர்ந்ததால் அர்த்தஜாம பூஜையில் தேனும், தினை மாவும் நைவேத்யமாக படைக்கப்படுகிறது. வள்ளி வாழ்ந்த இடம் என்பதால் அவளது பெயரிலேயே இத்தலம் அழைக்கப்படுகிறது.
இந்த கோயிலில் அமைந்துள்ள குளத்திற்கு சரவண பொய்கை என்று பெயர். குளத்திற்கு அருகே வள்ளியின் கோயில் ஒன்றும் அமைந்துள்ளது. குளத்தை அடுத்து வரும் படிகட்டுகளில் ஏறித்தான் முருகனை வழிபட முடியும். படிகட்டுகளை ஏறி செல்லும் பொழுது ஆங்காங்கே மண்டபங்களும் அமைந்துள்ளது. அதில் 8 கால் மண்டபத்தை தவிர மற்றவைகள் சில ஆண்டுகளுக்கு முன்புதான் (2009-ஆம் ஆண்டிற்கு முன்னதாகவே) புதுப்பிக்கப்பட்டன. ஆனால் அந்த 8 கால் மண்டபம் மட்டும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள வள்ளிமலை முருகன் கோயிலில், சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற புதுப்பிக்கும் பணிகளின் போது, 8 கால் மண்டபப் பகுதியில் உள்ள ஒரு கல்லை அகற்றும்போது அங்கிருந்து வாசனை நிரம்பிய புகை வந்ததாகவும், அதற்குள் சித்தர்கள் தியான நிலையில் இருந்ததாகக் கண்டறியப்பட்டது. அதனால் அவ்விடத்தில் மட்டும் எந்தவித மாற்றமும் செய்யாமல் அந்த கல்லை அப்படியே மூடிவிட்டனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்குள்ள குருக்கள் கோயில் கருவறைக்குள் உள்ள ஒரு துளையைக் காண்பித்து, இது சித்தர்கள் சென்று வந்து கொண்டிருந்த இடம் என்றும், தற்போதும் இதற்குள் சித்தர்கள் இருப்பதாகவும் நம்பப்படுகிறது என்று கூறுகிறார்.
அங்குள்ள ஒரு பாறையைப் பார்த்தால் யானையின் உருவம் தெரிகிறது. வள்ளியை தன் பால் கவர முருகனுக்கு உதவி செய்ய வந்த விநாயகர் பெருமான் தான் அந்த யானையின் உருவம் கொண்ட பாறை என்று நம்பும் பக்தர்கள் அதனை கணேச கிரி என்று பக்தியோடு வணங்குகிறார்கள்.
அங்கே ஒரு சுனை இருக்கிறது. இதற்கு ஒரு புராணக் கதையும் உள்ளது. அதாவது முருகன் வயதான தோற்றத்தில் வள்ளியிடம் வந்து தனக்கு பசிப்பதாகவும், தேனும், தினை மாவும் தரும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி வள்ளியும் கொடுத்தார். அதனை சாப்பிடும்போது முருகனுக்கு விக்கல் எடுத்ததாகவும், அதற்காக வள்ளி ஓடோடிச் சென்று இந்த சுனையில் இருந்துதான் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சுனைக்கு மிகவும் மகத்துவம் உள்ளதாக பக்தர்கள் நம்புகின்றனர். திருமணமாகாத பெண்கள் இந்த சுனையில் இருக்கும் நீரை எடுத்து தலையில் தடவிக் கொண்டு தனக்கு நல்ல கணவன் வர வேண்டும் என்று வேண்டிக் கொள்வது வழக்கம்.
இந்த கோயில் மாலை 5 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். கோயிலுக்குள் 4 மணிக்கெல்லாம் சென்றுவிட்டால் அதற்கு பின்னர் 2 கி.மீ. தூரம் நடந்து சென்று ஆசிரமம், சுனை, திருமால் கிரீஸ்வரர் கோயில்களை தரிசனம் செய்துவிட்டு திரும்ப இயலும். கோயிலின் நடை சார்த்தப்பட்டாலும், மற்ற பகுதிகளுக்குச் சென்று திரும்ப தனி வழி உள்ளது.
மலை உச்சியில் உள்ள குகைக் கோயிலுக்குச் செல்ல 444 நன்கு அமைக்கப்பட்ட படிகள் உள்ளன.
வள்ளிமலையில் பல சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். வள்ளிமலைக் குன்றில் திருப்புகழ் ஆசிரமமும் சமணக் குகைகளும் அமைந்துள்ளன.
மூலவா் : முருகன், வள்ளி, தெய்வயானை
தீா்த்தம் : சரவண பொய்கை
தலவிருச்சம் : வேங்கை
கோயில் அமைப்பு :
இது கி.பி. 856 – 917 காலகட்டத்தில் பல்லவ மன்னர்களால் அமைக்கப்பட்ட குடைவரைக் கோயிலாகும்.
வரலாறு:
இங்குள்ள கல்வெட்டுகள், மேற்கு கங்க மன்னர் ராஜ மல்லன்-1 சமண முனிவர்களுக்காக இந்தக் குகைகளைக் குடைந்ததாகக் கூறுகின்றன.
மலைக்கோயிலில் கொடி மரத்திற்கு எதிரே விநாயகர் இருக்கிறார். முன் மண்டபத்தில் நவவீரர்கள், நம்பிராஜன் இருக்கின்றனர். இங்கிருந்து சற்று தூரத்திலுள்ள வனத்திற்குள் வள்ளி பறவைகள் விரட்டிய மண்டபம், நீராடிய சுனை, மஞ்சள் தேய்த்த மண்டபம், முருகன் நீர் பருகிய குமரி தீர்த்தம் (சூரிய ஒளி படாத தீர்த்தம்) ஆகியவை உள்ளன. யானையாக வந்து வள்ளியை பயமுறுத்திய விநாயகர், மலை வடிவில் இருக்கிறார். இதை யானைக்குன்று என்றழைக்கிறார்கள்.
வள்ளிக்கு தனி சன்னதி இருக்கிறது.
முருகன், வள்ளியுடன் பேசிக்கொண்டிருந்த போது, அங்கு நம்பிராஜன் வந்து விட்டார். எனவே முருகன் வேங்கை மரமாக உருமாறி தன்னை மறைத்துக் கொண்டார். இந்த மரமே இத்தலத்தின் விருட்சமாக இருக்கிறது.
சிறப்பு : அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலம் இது.
வேலூரில் இருந்து வள்ளிமலை சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. காட்பாடி மற்றும் பொன்னை வழியாக இந்த இடத்தை எளிதாக அடையலாம்.
பேருந்து வசதி:
வேலூர் பழைய பேருந்து நிலையம் அல்லது புதிய பேருந்து நிலையத்திலிருந்து பொன்னை செல்லும் பேருந்துகள் வள்ளிமலை அடிவாரம் வழியாக இயக்கப்படுகின்றன.
பயண நேரம்: பேருந்து அல்லது வாகனத்தில் செல்ல தோராயமாக 30 முதல் 45 நிமிடங்கள் ஆகும்.
முகவரி : அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,
வள்ளிமலை, வேலூர் மாவட்டம்.
